கருணாநிதிக்கு கறுப்பு கொடி- ஊனமுற்ற வாலிபருக்கு அடி,உதை
மதுரை: முதல்வர் கருணாநிதிக்கு கறுப்புக் கொடி காண்பித்த ஊனமுற்றவரை போலீசாரும், திமுகவினரும் அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
விழா முடிந்து கருணாநிதி சர்க்யூட் ஹவுஸ்க்கு சென்றார். இதன் காரணமாக அந்த வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாண்டியன் ஒட்டல் முன்பு முதல்வர் கார் சென்றபோது ஊனமுற்ற வாலிபர் ஒருவர் திடீரென கறுப்புக் கொடி காட்டினார். அந்த கொடியில் கருணைக்காக கறுப்புக்கொடி என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்ட திமுகவினர் ஆவேசம் அடைந்து அந்த ஊனமுற்ற வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த வாலிபர் அவருடைய 3 சக்கர வண்டியில் இருந்து சரிந்து விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். திமுகவினரிடம் இருந்து அந்த ஊனமுற்ற வாலிபரை போலீசார் மீட்டு அவர்களும் அடித்து உதைத்தனர். பின்னர் அவரை விசாரித்தனர்.
இதுகுறித்து அந்த வாலிபர் கூறியதாவது: எனது பெயர் ராஜா (34). பைக்காரா முத்து ராமலிங்கபுரத்தை சேர்ந்தவன். வறுமை காரணமாக பட்ட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். எனது குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. எனக்கு வேலை கேட்டு பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது பிரச்சனையை தமிழக முதல்வருக்கு உணர்ந்தவே கறுப்பு கொடி காட்டினேன். மற்றபடி எனக்கு வேறு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்றார். இதையடுத்து போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.