டி.எம்.எஸ். பாராட்டு விழா: மறக்கப்பட்ட எம்.ஜி.ஆர்!
மதுரை: மதுரையில் நடந்த டி.எம். செளந்தரராஜன் பாராட்டு விழாவில் அவர் குரலில் பல கொள்கைப் பாடல்கள், தத்துவப் பாடல்களைப் பாடி பெரும் புகழ் பெற்ற மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை மட்டும் அலங்கரிக்காமல் விட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் சிலை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா மாலையில் நடைபெற்றது.
தமிழ் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கனேசனுக்கு பின்னணி பாடியதன் மூலம் பிரபலமடைந்தவர் டி.எம்.சௌந்தரராஜன். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி டி.எம்.சௌந்தரராஜனுக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா மதுரையில் நடத்த திட்டமிட்டார்.
நேற்று அந்த விழா நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு டி.எம்.எஸ்ஸைப் பாராட்டிப் பேசினார்.
இதனையொட்டி, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இரு பக்கமும் டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகளும், வைக்கப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விழாவை முன்னிட்டு அண்ணா, பெரியார், முத்துராமலிங்கத் தேவர், திருவள்ளுவர் சிலைகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
மதுரை மாநகராட்சி முன்பு மாட்டுத்தாவணிக்கு செல்லும் பிரதான சாலையில் மேயர் தேன்மொழி கோபிநாதன் அமைத்திருந்த அலங்கார வளைவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவை நத்தை போல ஊர்ந்து செல்லும் நிலைக்கு ஆளாயின. இதே நிலைதான் கோரிபாளையம் தேவர் சிலை அருகிலும் காணப்பட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர். உருவச்சிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர். சிலை மட்டும் சாதாரணமானநிலையில் விடப்பட்டிருந்தது.
சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு தான் டி.எம்.சௌந்தரராஜன் அதிக பாடல்களை பாடி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் மறுகுரலாகவும் புகழ் பெற்றவர் டி.எம்.எஸ். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். உருவச்சிலையை கண்டுகொள்ளாமல் விட்டது நியாயமா மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications