அமர்நாத் விவகாரம்-பாஜகவின் 3 நாள் போராட்டம்
டெல்லி: அமர்நாத் விவகாரம் தொடர்பாக 3 நாள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்த கோரிக்கையை அது நிராகரித்து விட்டது.
அமர்நாத் தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு திரும்ப எடுத்துக் கொண்டு விட்டது. இதை எதிர்த்து ஜம்முவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ சமிதி இதுதொடர்பான போராட்டத்தை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பாஜகவும் பங்கேற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா அமர்நாத் சங்கர்ஷ சமிதி தலைவர்களுடன் பேச நான்கு பேர் கொண்ட கமிட்டியை நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், அமர்நாத் கோவிலுக்கு மீண்டும் நிலத்தை வழங்கக் கோரி 3 நாள் தேசியஅளவிலான போராட்டத்தை நடத்தப் போவதாக பாஜக அறிவித்தது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு, அத்வானிக்கு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று அத்வானியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பாஜக முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஜம்மு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் இறுதியில், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்வானியின் வீட்டில் நடந்த இக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்தாமல் மென்மையான முறையில் இப்பிரச்சினையை அணுக பாஜக விரும்புகிறதாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இப்பிரச்சினையில் தீவிரமாக நடந்து கொண்டால் அது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகி விடும். அது கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என பாஜக கருதுகிறது. ஆனால் அதற்கு நேர் மாறான போக்கில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதால் பாஜகவுக்கு தர்மசங்கடமாகியுள்ளதாம்.
தற்போது ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ சமிதியை உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ்.தான். இந்த போராட்டக் குழுவில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications