கபிணி அணை நிரம்பியது-மேட்டூருக்கு 56,000 கன அடி நீர் திறப்பு
வயநாடு: கேரளாவின் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது.
தென் மேற்கு பருவ மழை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் பருவ மழை கடந்த 10 நாட்ளாக விளாசிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 56 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் இன்னும் 2 நாட்களுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் எனத் தெரிகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 968 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையும், ஹேமாவதி அணையும் வேகமாக நிரம்பி வருவதால்அங்கிருந்தும் மேட்டூருக்கு நிறைய நீர் திறந்து விடப்படும். எனவே விரைவில் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications