போலீஸ் வேடத்தில் ரூ. 3.75 கோடி துணிகர கொள்ளை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே போலீஸ் வேடத்தில் வந்த கொள்ளைக் கும்பல் நகைக் கடை ஊழியர்களை மடக்கி அவர்கள் வைத்திருந்த ரூ. 3.75 கோடி பணத்தைப் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடை மங்கள் அன்ட் மங்கள். மிகப் பெரிய நகைக் கடையான இக்கடையின் ஊழியர்கள் சென்னைக்கு பணத்துடன் நகைக்கு ஆர்டர் கொடுக்க லாக்கர் பொருத்தப்பட்ட வேனில் பலத்த பாதுகாப்புடன் கிளம்பினர்.
அந்த வேனில் ஊழியர்கள் சீனிவாசன், செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர். பூபதி என்பவர் வேனை ஓட்டினார். வேன், நேற்று காலை 6 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்ப்பேட்டை அருகே வேப்பூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கிருந்த ரயில்வே கேட் பகுதியில் போலீஸ் உடையில் இருந்த 5 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நகைக் கடை வேனை மறித்து நிறுத்தினர்.
வேனில் என்ன உள்ளது என்று விசாரித்தபடி உள்ளே ஏறிப் பார்த்துள்ளனர். பின்னர் லாக்கரை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் பணம் இருப்பதற்கான உரிய ஆவணங்கள் இருப்பதாக கூறியும், ஏன் திறந்து காட்டச் சொல்கிறீர்கள் என்று சீனிவாசன் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் உடையில் இருந்தவர்கள் பூபதி மற்றும் சீனிவாசனை அடித்துள்ளனர். பின்னர் நீங்கள் தீவிரவாதிகள்தானே என்று கூறியபடி அவர்களை மேலும் அடிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து சீனிவாசன் லாக்கரை திறந்து காட்டினார்.
அதைப் பார்த்த கும்பலில் இருந்த ஒருவர் லாக்கரில் பணம் இருப்பதாக மற்றவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து திடீரென ஐந்து பேரும் சேர்ந்துவேனில் இருந்த மூன்று பேரையும் உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். பின்னர் வேன் சாவியைப் பிடுங்கிக் கொண்டனர். அடி தாங்க முடியாமல் 3 பேரும் அலறவே அவர்களை கயிற்றால் கட்டிப் போட்டு லாக்கர் இருந்த அறையில் மூடினர்.
பின்னர் லாக்கர் வேனுடன் திருச்சி நோக்கி வண்டியைத் திருப்பினர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வேனை நிறுத்தி விட்டு லாக்கரில் இருந்த பணம் அத்தனையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.
அந்த இடம் லக்கூர் என்ற பகுதியாகும். அப்பகுதி மக்கள் வேன் ஒன்று யாருமற்று நிற்பதைப் பார்த்து வந்து பார்த்தனர். அப்போது லாக்கர் அறையில் 3 பேர் கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து அவர்களை விடுவித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் பறந்தது.
போலீஸார் விரைந்து வந்தனர். 3 ஊழியர்களும் காயத்துடன் இருப்பதைப் பார்த்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். லாக்கரில் இருந்த ரூ. 3 கோடியே 75 லட்சம் திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நாலாபுறமும் அவர்களைத் தேடி போலீஸார் முடுக்கி விடப்பட்டனர். திட்டமிட்டுதான் இந்த கொள்ளையில் அந்தக் கும்பல் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வரும் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வாறு அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவது போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications