தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக ஸ்ரீபதி நியமனம்
சென்னை: தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக கே.எஸ் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையாக சிறப்பு தலைமைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவியில் தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு அவர் இப்பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் செய்து வரும் அனைத்துப் பணிகளையும் இவர் கவனிப்பார்.
இந்த மாதத்துடன் தலைமைச்செயலாளர் எல்.கே. திரிபாதி ஓய்வு பெறுகிறார். இன்று முதல் தலைமைச் செயலாளர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் ஸ்ரீபதியும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நாள் வரை தலைமைச் செயலாளர் திரிபாதிக்கு அனுப்பப்பட்டு வந்த அனைத்து கோப்புகளும், இனிமேல் ஸ்ரீபதி மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலர், கண்காணிப்பு ஆணையர், நிர்வாக சீரமைப்பு ஆணையர் ஆகிய பதவிகளை வகித்தவர் ஸ்ரீபதி. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதவியுடன் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளிலும் ஸ்ரீபதி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீபதி கூறுகையில், அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து முறையாக நடைமுறை படுத்துவதே என்னுடைய நோக்கம். அரசு எந்த திட்டத்தை முன்னுரிமை அளித்து நிறைவேற்ற விரும்புகிறதோ, அதன் அடிப்படையில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினார்.
முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுடன், ஜெயலலிதா வழக்கு தொடர்பாக எல்.கே.திரிபாதி பேசியதன் டேப் வெளியாகி சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திரிபாதிக்கு இணையாக ஸ்ரீபதியை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications