குமரி கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது

முன்னதாக இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல்,
பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருதினை வழங்கினார்.
மேலும் ஊனமுற்றோர் நலனுக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
சிறந்த ஊனமுற்றோர் அலுவலருக்கான விருது கிருஷ்ணகிரி மாவட்ட ஊனமுற்றோர் அலுவலர் மணிமாறனுக்கும்,
ஊனமுற்றோரை பராமரிக்கும் சிறந்த மருத்துவருக்கான விருதை தி.நகரைச் சேர்ந்த டாக்டர் மோகன்ராஜும், ஊனமுற்றோருக்கான சிறந்த சமூக பணியாளர் விருதை தேனாம்பேட்டை தங்கமும் பெற்றனர்.
மகளிர் நல சமூகப் பணியாளர் விருதை ஓசூர் ரேவதி மோகன் பெற்றார்.
சிறந்த ஊனமுற்றோர் நிறுவனங்களுக்கான விருது திருச்சி புனித அன்னாள் சிறப்புப் பள்ளி, திண்டுக்கல் ஊரகக் கல்வி வளர்ச்சிக்கான முகமை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
பிறகு ஊனமுற்ற குழந்தைகள் 1,000 பேருக்கு முதல்வர் கருணாநிதி இனிப்பு பொட்டலங்களை வழங்கினார்.
எஸ்.பிக்கு ஜனாதிபதி விருது:
திருச்சி மாவட்டஎஸ்.பி. கலியமூர்த்திக்கு குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது.
1976ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த கலியமூர்த்தி பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் 3 விடுதலைப் புலிகளை துணிச்சலுடன் பிடித்து, அவர்களிடமிருந்து வயர்லஸ் கருவிகளையும், வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தவர். இதற்காக முதல்வர் வீர விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும், 1997ம் ஆண்டு திருச்சி, ஈரோடு, திருச்சூர் ஆகிய இடங்களில் ரயில்களில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளையும் பிடித்து சாதனை படைத்தவர்.
கலியமூர்த்தி 27 வீரப் பதக்கங்களையும், 150 நல்லெண்ணப் பதக்கங்களையும் பெற்றுள்ளார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழக காவல் துறையில் ஐந்து அதிகாரிகளுக்கு சமூக சேவைக்கான பதக்கங்களும், 10 அதிகாரிகளுக்கு புலன்
விசாரணைக்கான சிறப்புப் பதக்கங்களும் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications