பழனியில் பட்டாசைக் கடித்த மாடு படுகாயம்
பழனி: பழனியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் வாயில் சிக்கிய வெடி வெடித்ததில் மாட்டின் வாய் கிழிந்து படுகாயம் அடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவர் வையாபுரி குளத்தில் தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். குளத்துக்கு அருகில் இவரது மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர வெடிசத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து மாட்டின் அலறல் சத்தமும் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் மாடு இருந்து திசை நோக்கி ஓடினார். அப்போது மாட்டின் வாய்பகுதி கிழிந்து ரத்தம் சொட்டியது. மாடு வலியால் துடிதுடித்து. மாட்டின் தாடைப்பகுதி மற்றும் நாக்கு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து மாட்டை மருத்துவமனைக்கு பழனியப்பன் கொண்டு சென்றார்.
குண்டு வெடித்துவிட்டதாக பழனி முழுவதும் தகவல் பரவியது. இதனால் வெடிகுண்டு பீதி பரவியது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு வெடித்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.
திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு அல்லது வெங்காய வெடி மாட்டின் வாயில் சிக்கி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.