பின்கோடு முறை ரத்தாகிறது-அறிமுகமாகிறது 'பேல்'!
டெல்லி: தற்போது நடைமுறையில் உள்ள பின்கோடு (Postal Index Code) எண் முறையை ரத்து செய்து விட்டு 'பேல்' எனப்படும் (Postal Address Locator) புதிய முறைக்கு மாற தபால்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தபால் நிலையங்களை அடையாளம் காட்டும் வகையில் தற்போது பின்கோடு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி 6 இலக்க எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
1972ம் ஆண்டு இந்தியாவில் பின்கோடு முறை அமலுக்கு வந்தது. அந்த எண்கள்தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது. இந்த பின்கோட்டை வைத்து இந்தியாவை 8 மண்டலமாக தபால்துறை பிரித்துள்ளது.
முதல் மண்டலத்தில் (1 என்ற எண்ணில் ஆரம்பிக்கும்) டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர் ஆகியவை அடங்கும்.
2வது மண்டலத்தில் உ.பி. உத்தரகாண்ட் ஆகியவையும், 3வது மண்டலத்தில் ராஜஸ்தான், குஜராத், டையூ, டாமன் ஆகியவையும், 4வது மண்டலத்தில் சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ம.பி, கோவா ஆகியவையும், 5வது மண்டலத்தில் கர்நாடகா, ஆந்திராவும், 6வது மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுகளும், 7வது மண்டலத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒரிசா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அந்தமான் நிக்கோபார், மேகாலயா ஆகியவையும், 8வது மண்டலத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்டும் அடங்கும்.
பின்கோடு முறையில் உள்ள சில சிரமங்களை மனதில் கொண்டு தற்போது அந்த எண்ணுக்குப் பதில் பேல் எனப்படும் போஸ்டல் அட்ரஸ் லொகேட்டார் எனப்படும் புதிய முறைக்கு மாற தபால்துறை முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முறையில், கிராமம், நகரம், இடம், கட்டடம், தெரு, சாலை என அனைத்துக்கும் கோட் எண் தரப்படும். எனவே ஒருவரது முகவரியை வெகு எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் பேல் எண்ணை வைத்து ஒருவரின் முகவரியையும் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
தபால்காரர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த பேல் முறைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தபால்துறை மாறவுள்ளது.












Click it and Unblock the Notifications