போராட தயாராகுங்கள்: விவசாயிகளுக்கு ராமதாஸ் அழைப்பு
திருச்சி: விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியிலும் தமிழகத்திலும் யாரும் தயாராக இல்லை. எனவே போராடுவதற்கு விவசாயிகள் தயாராக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருச்சியில் கரும்பு விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது
கரும்பு விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் கூடி கலந்தாய்வு செய்யும் வகையில் இரண்டு நாள் கூட்டத்துக்கு சென்னையில் நானே ஏற்பாடு செய்கிறேன். போக்குவரத்து, தங்கும் செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அதில், கரும்பு விவசாயத்தின் அனைத்து பிரச்சனையகளுக்கும் தீர்வை கண்டறிந்து தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள். இரண்டாம் நாள் நிறைவில் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
பின்னர், சென்னை தீவுத்திடலில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து விவசாயிகளும் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும்.
கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அப்போது, தற்போதுள்ள நிலையில் தேர்தலை சந்திக்க முடியாது. விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே மத்திய நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று விவசாயிகள் பிரச்சனையை கேட்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு, நானே நேரில் வந்து விவசாயிகளை சந்திக்கிறேன் என்று பிரதமர் கூறினார். முதல் முதலாக மத்திய வேளாண் துறை அமைச்சரை தமிழகத்துக்கு அழைத்து வருகிறேன். அவரிடம் விவசாயிகள் தங்கள் பிரச்சனையை தெரிவியுங்கள்.
வரும் காலத்தில் விவசாயிகள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே விவசாயிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ஆண்டுக்கு இரு முறை, விவசாயிகளின் பிரச்சனைக்கு முழுமையாக நேரத்தை செலவிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முதல்வர் முன் வர வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு முன்னேற்றம் அடையாது. மத்தியிலும் தமிழத்திலும் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண யாரும் தயாராக இல்லை. எனவே எல்லா பிரச்சனைகளுக்கும் போராட விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications