பதவி விலகினார் முஷாரப்-இடைக்கால அதிபர் சூம்ரு
நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தையும் பதவி பறிப்பையும் வழக்குகளையும் எதிர்கொண்டிருந்த பர்வேஸ் முஷாரப் இன்று
அந் நாட்டு தொலைக் காட்சி, ரேடியோவில் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
கடந்த 9 ஆண்டுகளாக நாட்டுக்காக மிகக் கடுமையாக பாடுபட்டேன். இன்று முக்கிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.
எனக்கு எதிராக சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவது துரதிஷ்டவசமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நேர்மையாக பாடுபட்டேன்.
கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரம் சிறந்த முறையில் மேம்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றேன் என்பதை உறுதியோடு சொல்வேன்.
பாகிஸ்தானின் கொள்கைகளை உயர்த்தி்ப் பிடித்தேன். என்னை விரட்ட முயல்பவர்கள் நாட்டிடை ஏமாற்ற முயல்பவர்கள் ஆவர்.
எனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
அனைத்துத் தரப்பினரும் விட்டுத் தந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி வந்தேன். (நவாஸ் ஷெரீப்புடன்) தனிப்பட்ட முறையிலும், அரசு அளவிலும் விட்டுத் தந்து நடந்து கொள்ள முயற்சித்தேன். ஆனால், அந்த முயற்சிகள் வெல்லவில்லை.
இதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கும் மக்களுக்கும் தான்.
தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். அவையெல்லாம் தவறான குற்றச்சாட்டுகள்.
நான் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தினேன். அதில் எனக்கு வேண்டிய, வேண்டாத அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்கச் செய்தேன். காரணம், நாட்டில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்பதற்காகத் தான். நான் நேர்மையற்றவனாக இருந்திருந்தால், ஏன் எல்லா தரப்பையும் தேர்தலில் பங்கேற்க செய்திருக்கப் போகிறேன்?.
ஆனால், தேர்தலில் வென்று இப்போது எனக்கு எதிராகவே காய் நகர்த்துகிறார்கள்.
என்னை பழிவாங்க முயல்கிறார்கள். எனக்கு எதிராக எந்த கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ஆனால், என் மீதான எந்த கண்டனத் தீ்ர்மானமும் நிற்காது, எனக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. அந்த குற்றச்சாட்டுகள் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, பயமும் இல்லை.
ஆனால், இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மீது, சமூகம் மீது என்ன வகையான விளைவு ஏற்படும் என்பது தான் என் கவலை. ஸ்திரமற்ற நிலையை இந்த நாடு தாங்குமா?.
இந்த சூழ்நிலையில் நான் எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பிவிட்டேன்.
எனக்கு யாரிடமும் எதுவும் வேண்டாம், நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை.
என்னைப் பற்றி வரலாறு முடிவு செய்யும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இந்த நாட்டுக்காக என் இதயம் ரத்தம் சிந்துகிறது.
எனது ராஜினாமாவை ஏற்குமாறு எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன். கண்டனத் தீர்மானத்தில் நான் வெல்கிறேனோ இல்லையோ நான் எப்போதும் பாகிஸ்தானுக்கு தலை வணங்குவேன்.
நான் இந்த நேரத்தில் முப்படையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது தியாகம், என் மீது காட்டிய அன்புக்கு நன்றி.
நான் இந்த நேரத்தில் முப்படையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது தியாகம், என் மீது காட்டிய அன்புக்கு நன்றி என்றார்.
அதே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுவாரா என்பது குறித்து ஏதும் கூறவில்லை.
செளதியில் அடைக்கலம்?:
இதற்கிடையே அவரை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து தவிர செளதி அரேபியாவும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
முஷாரப்பிடம் இருந்து நவாஸ் ஷெரீப்பை காப்பாற்றி பாதுகாப்பு தந்த செளதி இம்முறை ஷெரீப்பிடம் இருந்து முஷாரப்பை காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக செளதி வெளியுறவு அமைச்சர் அஜீஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு செளதியே அடைக்கலம் கொடுக்கும் என்றும் தெரிகிறது.
அவர் பதவி விலகினால் நாட்டை விட்டு கெளரவமாக வெளியேற உதவ வேண்டும் என நவாஸ் ஷெரீ்ப்-சர்தாரி ஆகியோரிடம் செளதி கூறியுள்ளது. அதை இருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு வெற்றி-சர்தாரி:
முஷாரப்பின் ராஜினாமா மக்களுக்குக் கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
மேலும் அடுத்த ஜனாதிபதி தங்களது கட்சியைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார் என்றும் அவரது கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இடையே மீண்டும் ஒரு மோதல் நடக்கலாம் எனத் தெரிகிறது.
இடைக்கால அதிபர் சூம்ரு:
முஷாரப் விலகியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இடைக்கால அதிபராக செனட் சபையின் தலைவர் முகம்மத் மியான் சூம்ரு பதவியேற்பார் என அந் நாட்டு சட்ட அமைச்சர் பரூக் நேயக் அறிவித்துள்ளார்.