நாளை இடதுசாரிகளின் ஸ்டிரைக்: ஆட்டோ-லாரி ஓடாது
டெல்லி: இடதுசாரி கட்சிகள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாளை நடத்தவுள்ள நாடு தழுவிய ஸ்டிரைக் காரணமாக பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த ஸ்டிரைக்கிற்கு ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய 7 இடதுசாரி தொழிற்சங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, பொருளாதார ஏற்றாத் தாழ்வை சரி செய்யாதது, தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாதது, தொழிலாளர் சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியது, தொழிலாளர் விரோதப் போக்கு அதிகரிப்பது ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தத்தில் 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேரணிகள், முற்றுகைப் போராட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்டவை நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்திலும்...:
தமிழகத்திலும் போராட்டம் முழு அளவில் நடைபெறும் என தமிழக இடதுசாரி தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 70 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்களான செளந்தரராஜன், தியாகராஜன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் 80 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
அரசு பஸ்கள் ஓடும் - அமைச்சர் நேரு:
இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாளை ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்துள்ள போதிலும், அரசு பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடதுசாரி தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தார்மீக ஆதரவு அளிக்கிறது.
இருப்பினும் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். அரசு பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications