சேலத்தைக் கலக்கும் வீரப்பன் கண்காட்சி!

தமிழக, கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக சத்தயமங்கலம் காட்டில் ராஜ்ஜியம் நடத்தி வந்தவர் வீரப்பன். மெலிந்த தேகம், கருப்பான உயரமான உருவம் என வையாபுரி டைப்பில் இருந்த வீரப்பன்,தனது முரட்டு மீசையால் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை ஆட்டிப்படைத்து வந்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப் படைத்த வீரப்பன் சந்தன கடத்தலுக்கு பெயர் போனவர். இவரை பிடிக்க தமிழகம், கர்நாடகம் தவிர கேரளாவும் கூட முயன்று வந்தது. 3 மாநிலங்களும் பட்டபாடு மிகவும் அதிகம்.
சத்திய மங்கல காட்டில் அதிரடி படையினர் பல ஆண்டுகளாக முகாமிட்டு வீரப்பனை தேடி வந்தனர். நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் தூதராக சென்று வீரப்பனிடம் பேசி வந்தார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் மூலம் உலகப் புகழ் பெற்றார் வீரப்பன்.
இப்படியாக தொடர்ந்து வீரப்பனின் அட்டகாசத்தை விஜயகுமார் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படையினர் பெரும் பிரயத்னத்தினத்துக்கு பிறகு கடந்த 18.10.2004 அன்று இரவு வீரப்பனையும் அவரது சகாக்களையும் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்று முடிவு கட்டினர்.
சந்தன காட்டு ராஜா வீரப்பனின் மரணத்திற்கு பின்னால் நிறைய குழப்பமான கேள்விகளும், விடை தெரியாமல் இருப்பதும் வேறு கதை.
இந்நிலையில் தமிழக காவல் துறை சார்பில் வீரப்பன் குறித்த கண்காட்சி சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வீரப்பன் பயன்படுத்திய சில கருவிகள், அவருடைய சட்டை, ரேடியோ, சில வரைபடங்கள், மூச்சு திணறலுக்கான மருந்து, பிபி மானிட்டர் கருவி ஆகியவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் இந்த கண்காட்சியை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வீரப்பன் தீவிரவாதி என்றாலும் அவரை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. அவர் பயன்படுத்திய கருவிகள் பிரமிக்க வைக்கிறது என்கின்றனர் கண்காட்சியை பார்வையிடும் பொது மக்கள்.
ஆனால் அந்த கருவிகள் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. இதை வைத்துக் கொண்டா வீரப்பனால் 30 ஆண்டுகள் காட்டில் ராஜ்ஜியம் நடத்த முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
42 போலீஸ்காரர்கள், அதிகாரிகள் உள்பட 130 பேர் வீரப்பன் கையால் இறந்துள்ளனர். தந்தத்துக்காக 2000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பன் குறித்த கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் மிகுந்து ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications