அமர்சிங்கை உள்ளடக்கி புதிய ஐமுகூ ஒருங்கிணைப்பு குழு
டெல்லி: மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி கட்சியை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.
இடதுசாரிகள் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வந்தபோது ஐ.மு.கூட்டணியின் முக்கிய கட்சிகள் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டது.
ஆனால், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதில் இருந்து அந்தக் குழு அர்த்தமற்றதாகிவிட்டது.
இந் நிலையில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட புதிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்குக்கு முக்கிய இடம் தரப்படவுள்ளது. மேலும் அக் கட்சியின் சார்பில் ராம்கோபால் யாதவும் இந்தக் குழுவில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
சமாஜ்வாடி கட்சி அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முதல்படியாக இது அமையலாம் என்கிறார்கள்.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தலா ஒரு அமைச்சர் இடம் பெறுவர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications