காஷ்மீர் நிலவரம் - அமைச்சரவையிடம் எம்.கே. நாராயணன் விளக்கம்
டெல்லி: காஷ்மீர் நிலை குறித்து ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் இன்று விளக்கம் அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று அங்கு சென்றார். அவருடன் பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங், மத்திய உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி.ஹல்தார், இணை உளவு கமிட்டி தலைவர் உபாத்யாயா, பிரதமர் அலுவலக இணை செயலர் சஞ்சய் மிஸ்ரா, உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர்.
ஆளுநர் என்.என்.ஹோரா, உயர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த நாராயணன், மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை, கலவரம் தொடர்பான சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் இந்த குழு சந்தித்தது.
இன்று டெல்லி திரும்பிய நாராயணன், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இன்று மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்ைககள் குறித்தும் அவர் விவரித்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நாராயணன் மத்திய அமைச்சரவையிடம் விளக்கியுள்ளார்.
ஆளுனர் என்.என்.வோராவை அவர் சந்தித்து பேசியுள்ளார். நெருக்கடி நிலையை சமாளிப்பது குறித்து முதல்கட்ட நடவடிக்கையாக அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே கூட்டி விவாதித்துள்ளார் என்றார்.
ஸ்ரீநகர்-முஸாபராபாத் பஸ் போக்குவரத்து தொடக்கம்:
இதற்கிடையே, அமர்நாத் நிலவரம் தொடர்பாக கடந்த 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர்-முஸாபர்பாத் இடையிலான கேரவான் - இ -அமான் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. முதல் பேருந்தில் 64 பயணிகள் சென்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications