குடிநீர்: சிங்கம்புணரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: சிவகங்கை-ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சிங்கம்புணரி பகுதிகளையும் சேர்க்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சிங்கம்புணரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கான சொத்து வரியை பேரூராட்சி நிர்வாகம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே கடும் குடிநீர் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மீது மேலும் நிதிச்சுமையை திணிப்பது கண்டனத்துக்குரியதாகும். இதனால் அங்குள்ள ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சிங்கம்புணரி பேரூராட்சியிலும இதே நிலைதான். இதற்கு நிரந்தரத் தீர்வு காண திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவேரியில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் பயன் பெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரி பேரூராட்சி, மரிதிப்பட்டி, எஸ்.வி. மங்கலம், காலாப் பூர், சிவபுரிபட்டி, முறையூர், சூரக்குடி, கண்ணமங்கலம் பட்டி மற்றும் வகுத்தெளுந்துவன்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைபடி இந்த பகுதிகளை குடிநீர் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், சொத்து வரியை உயர்த்தியுள்ள சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாளை சிங்கம்புணரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கழக அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications