கவுன்சிலர் புகார்: திருச்சி-ராணுவ கமாண்டன்ட், வீரர்கள் மீது வழக்கு
திருச்சி: திருச்சியில் பாதை பிரச்சனை தொடர்பாக திமுக கவுன்சிலரை தாக்கிய விவகாரத்தில் ராணுவ கமாண்டன்ட் உள்பட 4 வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூரா, அன்புநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கே.கே.நகர், மன்னார்புரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைதான் பயன்படுத்தி வந்தனர்.
சில நாட்களுக்கு முன் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையி்ல் ராணுவத்தினர் குழி தோழி பள்ளம் ஏற்படுத்தினர். இதனால் பொது மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடம் வழியாக ராணுவத்தினர் பயன்படுத்திய பாதையை தடுக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அந்த பாதையின் உரிமையாளரின் அனுமதியுடன் மாநகராட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இதை முன்னாள் கவுன்சிலர் செல்வம் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் துப்பாக்கி முனையில் செல்வத்தை தரதரவென்று ராணுவ முகாமுக்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு அவரை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருச்சி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட கலெக்டர் சவுண்டையா, போலீஸ் கமிஷனர் பாலுசாமி, அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ராணுவ கமாண்டன்ட் மேடப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செல்வம் விடுவிக்கப்பட்டார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எடமலைபட்டிப்புதூர் போலீஸில் செல்வம் புகார் அளித்தார். இதையடுத்து திருச்சி 117 வது பிரிவு ராணுவ படை கமாண்டன்ட் மேடப்பா உள்பட 4 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக செல்வம் மீது ராணுவ படை அதிகாரி கர்னல் சக்ரவர்த்தியும் புகார் அளித்தார். அதன் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.












Click it and Unblock the Notifications