என்.எஸ்.ஜி. கூட்ட ஏமாற்றம்: வாஷிங்டன் விரைகிறார் மேனன்
உலக நாடுகளுடன் இந்தியா மீண்டும் அணு வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக அனுமதி அளிப்பது மற்றும் இந்தியா கோரியுள்ள நிபந்தனையற்ற சலுகைகளை அளிப்பது குறித்து முடிவு செய்ய கடந்த 2 நாட்களாக வியன்னாவில் என்.எஸ்.ஜி. கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது.
45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் 20 நாடுகள் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகளை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் முடிெவடுக்காமல் கூட்டம் முடிந்துள்ளது. செப்டம்பர் மாதம் மீண்டும் கூடிப் பேசவுள்ளனர்.
பர்ன்ஸுடன் ஆலோசனை:
இந்த நிலையில் என்.எஸ்.ஜியில் அளிக்கப்பட்ட வரைவறிக்கையில், திருத்தம் செய்யலாம் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், சிவசங்கர மேனன் வாஷிங்டன் விரைந்துள்ளார்.
திங்கள்கிழமை அவர் வாஷிங்டன் போய்ச் சேருகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை இணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸுடன் அவர் பேச்சு நடத்துகிறார்.
மேனன் வாஷிங்டனில் ஒரு நாள் இருப்பார். இந்தப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ள நிலையில் மேனனின் வாஷிங்டன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேனனின் பயணத்தின்போது என்.எஸ்.ஜியிடம் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் திருத்தம் செய்வது குறித்து அமெரிக்க நிர்வாகத்துடன் மேனன் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் மேனன் வியன்னாவில் பேசுகையில், இந்தியாவின் சலுகை கோரிக்கையை எந்த நாடும் எதிர்க்கவில்லை. அதேசமயம், நிபந்தனைகள் விதிக்காமல் அளிக்க முடியாது என்று சில நாடுகள் கூறியுள்ளன. இந்த கருத்து வேறுபாடுகள் மிகச் சிறிய அளவில்தான் உள்ளன.
45 நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.
அமெரிக்காவின் புதுக் கவலை:
இதற்கிடையே அமெரிக்காவுக்கு வேறுகவலை வந்துள்ளது. அதாவது செப்டம்பர் 26ம் தேதியுடன் அமெரிக்க நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளது. எனவே அதற்குள் எப்படியாவது இந்தியா- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற கவலையில் அந்த நாடு உள்ளது.
அமெரிக்காவின் ஹைட் சட்டத்தின்படி, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் சபையில் 30 நாட்களுக்கு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்:
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...