விமானங்களை போலவே ரயில்களில் பணி பெண்கள்
டெல்லி: விமானங்களைப் போலவே ரயில்களிலும் பணிப் பெண்களை (ஹோஸ்டஸ்கள்) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் செப்டம்பர் முதல் சில குறிப்பிட்ட ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் இந்த சேவை தொடங்கவுள்ளது.
இவர்களுக்கு யூனிபார்மும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. நேவி ப்ளூ பேண்ட்ஸ், வெள்ளை நிற சட்டை, பிளேசர்கள் அணிந்து பணியாற்றுவார்கள்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள், முதல் வகுப்பு ஆகியவற்றிலும் ஹோஸ்டஸ்கள் நியமிக்கப்படுவார்கள்.
செப்டம்பர் 26ம் தேதி முதல் கன்சன் கன்யா எக்ஸ்பிரஸ், வடக்கு பெங்கால் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பணிப்பெண்கள் சேவை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி-சியால்தா சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ், குவஹாத்தி-டெல்லி சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலும் பணிப் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. பணிப் பெண்களை தனியார் நிறுவனங்களே நியமிக்கவுள்ளன.
ஒரு பெட்டியில் 3 பணிப் பெண்கள் இருப்பர். உணவு, தண்ணீர் ஆகியவற்றை பறிமாறுவர். பெட்டிகளை சுத்தம் செய்யவும் சில ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பணிப்பெண்கள் உள்ள பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications