தமிழகத்தில் 9வது நாளாக தொடர்ந்து டீசல் தட்டுப்பாடு

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பெட்ரோலிய நிறுவனங்கள் முழு அளவில் முயற்சி எடுக்கவில்லை. இதனால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுவிட்டன.
இதையடுத்து நிலைமை குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவும் தமிழ்நாடு பெட்ரோல், டீசல் டீலர்கள் சங்கத்தின் பொதுக் குழு இன்று கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் கண்ணன் கூறுகையி்ல்,
கடந்த 9 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அங்கு பிரச்சனை சரி செய்யப்பட்டு விடுகிறது.
ஆனால், மற்ற மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயில் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் வழங்குவது இல்லை.
மின்சார தட்டுப்பாடு காரணமாக கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலமாக இயக்கப்படுவதினால் அதிக அளவு டீசல் தேவைப்படுகிறது என்று தலைமை செயலாளர் கூறியிருக்கிறார். லாரிகளுக்கு மட்டுமல்லாமல், கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கும் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் ஆயில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
பெட்ரோல் நிலைய உரிமையாளர்களிடம் 48 மணி நேரத்திற்கு முன்பே பணம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் தேவையான பெட்ரோல், டீசல் தர முடியும் என்றும் புதிய நிபந்தனையை ஆயில் நிறுவனங்கள் விதித்துள்ளன. இதனால், பெட்ரோல் டீலர்கள் பொருளாதாரரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக பெட்ரோல் டீலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பெட்ரோல் டீலர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தேவையான அளவு பெட்ரோல், டீசல் வழங்காமல் மிகக்குறைந்த அளவில் வழங்கி வரும் ஆயில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படு்ம் என்றார்.












Click it and Unblock the Notifications