கள்ளச்சாராயம்-அதிகாரிகளை நீக்க ராமதாஸ் யோசனை
திருவண்ணாமலை: கிராமங்களில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறும் கிராமங்களின் தலைவர், நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு திருவண்ணாமலை அரசு கல்லூரி அருகே நடந்தது.
அதில் ராமதாஸ் பேசியதாவது: தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் மதுதான். திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களில் 180 குடும்பத் தலைவர்கள் மது அருந்தியே உயிரை விட்டுள்ளனர்.
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே மது ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8840 டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று அரசு கூறுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க என்னிடம் பல திட்டங்கள் இருக்கிறது. இதை அரசு கேட்க தயாரா?.
திருவள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி பத்து குறள்கள் எழுதியுள்ளார். திருவள்ளுவர் வழியை கருணாநிதி கடைபிடிப்பவர், ஆனால் மது ஒழிப்பை மட்டும் கருணாநிதி ஏற்க மறுக்கிறார்.
கிராமங்களில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறும் அந்தந்த கிராமங்களின் தலைவர், நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் கள்ளச்சாராயத்தை கண்காணித்து கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் இல்லாத மகளிர் தொண்டு நிறுவனம், அனைத்து மதத்தினரையும் சேர்ந்தவர்களை கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும். தமிழகத்தில் மதுவை ஒழிக்க பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட தயாராக வேண்டும். எல்லா மதமும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் சொல்கிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications