ரங்கசாமி மீது ஆளுநரிடம் அமைச்சர்கள் புகார்
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது ஆளுநரிடம் அம்மாநில அமைச்சர்கள் புகார் மனு கொடுத்துள்ளது புதுவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகவே அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது. காரணம், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்களும் போர்க்கொடி உயர்த்தியிருப்பதுதான்.
ரங்கசாமியை மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒற்றை வரி கோரிக்கை. இந்தக் கோரிக்கையில், ஐந்து பேரும் பிடிவாதமாக இருக்கின்றனர். இவர்களுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி முழு ஆதரவுடன் இருக்கிறார்.
இந்த நிலையில், விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று புதுச்சேரி சட்டசபை காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் ராதாகிருஷ்ணனைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலிடப் பார்வையாளர்களான வயலார் ரவி, அருண்குமார், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டம் முடிந்து நாராயணசாமி வெளியே வந்தபோது அவரது காரை ரங்கசாமியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டதால் பல பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த நிலையில், புதுச்சேரி அமைச்சர்கள் ஐந்து பேரும் வைத்திலிங்கம் தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.
அதில், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரே தாக்கப்பட்டிருக்கிறது. அவர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
முதல்வருக்கு எதிராக அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து ஆளுநரிடம் புகார் கூறியது புதுவையில் பரபரப்பை கூட்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications