விழுப்புரம் - மேலும் 34 பேருக்கு பார்வை பாதிப்பு
விழுப்புரம்: இலவச கண் அறுவை சிகிச்சையால் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக மேலும் 34 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் தொழுவந்தாங்கல், அத்தியூர், கண்ணன்காடு, அரூர், பாக்கம், உலகுடையான்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக கடுவனூர் கிராமத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
பெரம்பலூரைச் சேர்ந்த ஜோசப் கண் மருத்துவமனையும், இந்திய பார்வைக் குறைபாடு தடுப்புக் கழகமும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
65 வயதுக்கு மேற்பட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 29 பேருக்கு கண் புரை எனப்படும் காட்ராக்ட் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் ஜூலை 29ம் தேதி அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி அனைவரும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு திரும்பிய சில நாட்களில் இவர்களுக்கு வாந்தியும், கடுமையான வலியும், கண் பாதிப்பும் ஏற்பட்டது. பார்வை மங்க ஆரம்பித்தது. இதையடுத்து கோவை சங்கரா கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டனர். பார்வை கோளாறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை ஜோசப் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனைவரும் மாற்றப்பட்டனர்.
அங்கு 29 பேருக்கும் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குள்ளான 29 பேருக்கும் அறுவைச் சிகிச்சையின்போது கெட்டுப் போன கண் சொட்டு மருந்துகள் தரப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 8 பேருக்கு முழுமையாக பார்வை போய் விட்டதாக கூறப்படுகிறது. 21 பேருக்கு பாதி பார்வைதான் இருக்கிறது. மற்றவர்களுக்கும் கண் பார்வை மங்கி வருகிறதாம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் 34 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 29ம் தேதி கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பார்வை கோளாறு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர்களுக்கு சிகிச்சை தொடங்கியுள்ளது. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications