தாக்குதல்-சோனியாவிடம் அமைச்சர் நாராயணசாமி புகார்
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு தன் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி சோனியாவிடம் புகார் செய்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர்கள் 5 பேரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.
மேலிடப்பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்கள் உள்ளிட்ட 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் தனித் தனியாக கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்தனர். காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் 3 சுயேட்சை எம்எல்ஏக்களையும் அவர்கள் தனியாக சந்தித்து பேசினர்.
கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் நாராயணசாமி வெளியே வந்தார். அப்போது அவரது கார் மீது அங்கு கூடியிருந்த ஒரு கும்பல் கற்களை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பலர் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக செய்திகள் பரவியதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. நாராயணசாமியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனது கார் மீது நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து முறையிட்டதாகத் தெரிகிறது.
அப்போது அவருடன் மேலிடப்பார்வையாளர் அருண்குமாரும் நடந்த சம்பவம் குறித்து சோனியாவிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications