சசி அக்காள் மகளுக்கு 3 ஆண்டு சிறை-கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு: அபராதம் ரூ. 30 லட்சம்

பாஸ்கரனின் மனைவி சீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் அக்காள் மகள் சீதளதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
பாஸ்கரனும், மனைவி சீதளதேவியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ்
சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் 1999ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2000ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 2001ம் ஆண்டில் சிபிஐ சாட்சிகள் விசாரணையை தொடங்கியது. சிபிஐ சார்பில் 56 சாட்சிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 130 ஆவணங்களும், 3 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டன.
பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை கடந்த 11ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்பில்,
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை ரூ.20 லட்சத்தை கட்டத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல பாஸ்கரனின் மனைவி சீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 9 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும் அவர்களிடம் உள்ள 80 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த பாஸ்கரன் மீது கலர் டிவி ஊழலிலும் வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications