நளினி வழக்கில் சு.சுவாமி திடீர் ஆஜர்-வக்கீல் மீது புகார்

தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில், இன்று நளினி மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு சுப்ரமணியன் சுவாமி ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை நளினியின் வக்கீல் சமர்ப்பிக்கவில்லை. நளினிக்கு மரண தண்டனை விதிக்கும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களையும் அவர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை.
நளினியின் வக்கீல் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, எனக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் நான் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பேன். ஒரு வேளை மனுதாரரின் (நளினி) வக்கீல் உண்மைகளை மறைத்திருந்தால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக அமையும்.
உங்களுடைய வாதங்களை ஆகஸ்ட் 29ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கும்போது எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட சுவாமி, ஆகஸ்ட் 29ம் தேதி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications