எல்டிடிஇ விமான தாக்குதல்-திரிகோணலை துறைமுகம் நாசம்!

இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வைத்து விடுதலைப் புலிகள் விமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஜெட்லைனர் என்கிற வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் மீதும் மற்றும் கடற்படை தளம் மீது அடுத்தடுத்து விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் திரிகோணமலை துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு 2 குண்டுகளை வீசி புலிகள் தாக்குதல் நடத்தினர்.
துறைமுகத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன. கடற்படை தளமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருவதாக திரிகோணமலை மக்கள் கூறுகிறார்கள். சேதம் பெருமளவில் இருக்கும் எனத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற கப்பலைக் குறி வைத்தும் புலிகள் குண்டு வீசியுள்ளனர். இந்தக் கப்பலில் பெருமளவிலான படை வீரர்கள் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தனர் என்று கூறப்படுகிறது.
திரிகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் விடுதலைப் புலிகளின் விமானம் மீது தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பி வன்னி காட்டுக்குள் மறைந்து விட்டது.
தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருளாக இருந்ததால், விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்க முடியவில்லை. கடற்படையினரும் புலிகளின் விமானங்களைத் தாக்க முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திடீர் விமானத் தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வடக்கில் ராணுவம் மேலும் முன்னேறாமல் தடுக்கும் பொருட்டே விமானத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications