'பாஜக': ஜெ. பேச்சு- தா.பாண்டியன் வரவேற்பு!
சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதாக அறிகிறோம். அப்படி கூறியது உண்மையாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தா.பாண்டியன். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளும் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே கூட்டாக முடிவெடுத்துள்ளன.
திமுக கூட்டணியில் இடதுசாரிகள் இல்லை:
தமிழகத்தை பொருத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறாது. எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்பது குறித்து தேர்தல் சமயத்தில் கூடி முடிவெடுக்கப்படும்.
திமுக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது முடிவு எதுவும் செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டும் தான் நாங்கள் பேசி யிருக்கிறோம். நாடாளு மன்ற தேர்தல் வேறு; சட்டமன்ற தேர்தல் வேறு.
ஜெ. பேசியிருந்தால் வரவேற்கிறோம்:
பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியிருப்பதாக கூறப்படும் செய்தி உண்மையாக இருந்தால் அதை வரவேற்கிறோம்.
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற ஒரு சூழ்நிலை தற்போது உள்ளது. இது அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய தனியார் விற்பனை நிலையங்கள் செய்கின்ற தந்திரம் என்று தெரிகிறது.
பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்கும் தனியார் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி மாநில அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இலங்கை-வேடிக்கை பார்க்கக் கூடாது:
இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவம் குண்டு வீசி மக்களை கொன்று குவித்து வருகிறது. அதை வேடிக்கை பார்த்து கொண்டிராமல் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகம் மீனவர்களை இனி இலங்கை கடற்படை தாக்காது என்று இலங்கை அரசு கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை இலங்கை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications