பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 7 பேர் பலி
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு குண்டு வெடித்தது. இதில் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சிஹாலா பகுதியில் உள்ள சாலையோர ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு 3 முதல் 4 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் பெரிய பள்ளமே உருவாகியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹோட்டல் சமையல்காரர் ஓமர்வாலி கூறுகையில், தாக்குதல் நடந்தபோது 20க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஹோட்டல் பயங்கர சேதமடைந்துள்ளது என்று கூறினார்.
சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications