சிறையில் டாக்டர் பிரகாஷுக்கு கம்ப்யூட்டர்!
சென்னை: சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபாச டாக்டர் பிரகாஷ், கம்ப்யூட்டர் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெண்களை ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்ட வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றுள்ள டாக்டர் பிரகாஷ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கு இன்டர்நெட் வசதியடன் கூடிய லேப்டாப் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பிரகாஷ்.
இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், பெரிய கருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர், சிறை விதிப்படி லேப்டாப் வழங்க முடியாது. வேண்டுமானால், சிறையில்உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரகாஷ் எந்த நோக்கத்திற்காக கம்ப்யூட்டர் கேட்கிறாரோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிரகாஷ் எந்த நேரத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என்பதை சிறை அதிகாரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.