தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் குதிக்கும் சோனியா
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் செப்டம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
செப்டம்பர் 4ம் தேதி ஈரோடு வீரப்பன் சத்திரம் சிக்கைய நாயக்கர் கல்லூரி மைதானத்தில், பிற்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி சிறப்புரையாற்றுகிறார்.
5ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவின்போது 3 பேருக்கும் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை அளிக்கிறது.
மேலும், அன்று மாலை 3 மணிக்கு சேலம் ஒருங்கிணைந்த உருக்காலைத் திட்ட விரிவாக்கத்திற்கான கால்கோள் விழா நடைபெறுகிறது. ரூ. 1750 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான கால்கோள் விழாவில் பிரதமர், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க நானும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனமும் 28ம் தேதி சேலம், ஈரோடுக்கு செல்கிறோம். மத்திய அமைச்சர் இளங்கோவனும் எங்களுடன் வருகிறார். அமைச்சர் வீரபாண்டு ஆறுமுகத்துடன் இணைந்து விழா ஏற்பாடுகள் செய்யப்படும்.
சேலம் நிகழ்ச்சியில்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸும் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 5 இடங்களுக்கு அழைத்து பொதுக் கூட்டம் நடத்த முதலில் தீர்மானித்திருந்தோம். அதன்படி முதலில்காரைக்குடியில் நடத்தப்பட்டது. தற்போது ஈரோட்டில் நடக்கவுள்ளது. அடுத்து திருச்சி, மதுரை, நெல்லையில் நடத்தப்படும்.
மாதந்தோறும் சோனியா காந்தி தமிழகம் வருவார். தேர்தல் சமயத்தில் சென்னையில் பிரமாண்ட பொதுக் கூட்டம்நடைபெறும். அதில் சோனியா காந்தியுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்வர்.
தமிழகத்தில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள அணியே பலமானது. நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வலிமையானது.
டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக மாட்டார். அப்படி அவர் ஒருபோதும் அவர் சொல்லவில்லை. அதேபோல சிபிஎம் தலைவர் வரதராஜனும் கூட திமுக அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் என்றுதான் கூறியுள்ளார்.
தா.பாண்டியன் எனது நண்பர். மற்ற கட்சி விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் கருத்து சொல்ல உரிமை உள்ளது.
தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்பதுகுறித்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முன்னணி தலைவர்கள் ஆகியோருடன் கலந்து பேசி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து சோனியா காந்தியிடம் தெரிவிப்போம். அவர் முடிவு செய்வார் என்றார் தங்கபாலு.