சூடான் விமான கடத்தல்காரர்கள் சரண்
சூடான் நாட்டின் டார்பர் பகுதியில் உள்ள நியாலா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் கார்டோமுக்கு கிளம்பிய சன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தை டார்பர் பகுதியைச் சேர்ந்த சூடான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கடத்தினர்.
அந்த விமானத்தில் 95 பயணிகளும், 2 விமானிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானத்தை பிரான்சுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். ஆனால், விமானத்தில் எரிபொருள் இல்லை என விமானிகள் கூறவே, அதை எகிப்தில் தரையிறக்க உத்தரவிட்டனர். ஆனால், விமானம் தரையிறங்க எகிப்து அனுமதிக்கவில்லை.
இதையடுத்து லிபியாவில் உள்ள குப்ரா ராணுவ விமான தளத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. தீவிரவாதிகளுடன் லிபிய அரசு நீண்ட நேரம் பேச்சு நடத்தியதையடுத்து 95 பயணிகளையும் விடுவித்தனர். பின்னர் இரு விமான சிப்பந்திகளை விடுவித்தனர்.
ஆனால், 2 விமானிகளையும் 4 சி்ப்பந்திகளையும் தொடர்ந்து பணயக் கைதிகளாய் வைத்துக் கொண்டு விமானத்தை பிரான்சுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதை லிபியா ஏற்கவில்லை. இதையடுத்து இன்று இரு தீவிரவாதிகளும் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விடுவிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் இன்னொரு விமானம் மூலம் மீண்டும் சூடான் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.