சட்டீஸ்கர்: நக்சல்கள் தாக்குதல்-6 போலீஸார் பலி
புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 6 போலீஸார் கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதில் நாராயண்பூர் உள்பட 5 மாவட்டங்களில் நகசலைட்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கோரா என்ற இடத்தில் இருந்து நாராயண்பூரை நோக்கி மத்திய ரிசர்வ் படை போலீஸார் ஜீப்பில் புறப்பட்டனர். நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் எஸ்ஐ, 4 கான்ஸ்டபிள்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மற்றொரு போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications