For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்கரன்-சீதளாதேவிக்கு நிபந்தனை ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர்கள் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி சீதளா தேவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் சிபிஐ கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் அது நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

சசிகலாவின் சகோதரி மகள்தான் சீதளா தேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 97 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998ல் வழக்குப்பதிவு செய்தது. 1999ல் சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2001ல் சாட்சிகள் விசாரணை தொடங்கி இம்மாதம் 11ந் தேதி முடிவுற்று கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார்.

எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சீதளாதேவி அபராதத்தொகை 10 லட்சம் ரூபாயை உடனடியாக செலுத்தி ஜாமீன் பெற்றார். இதையடுத்து ஒரு மாத காலத்திற்கு அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. எஸ்.ஆர்.பாஸ்கரன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரது சார்பிலும் வழக்கறிஞர்கள் கே.எம். சுப்பிரமணியன், ஜி.சரவண குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பாஸ்கரனின் சொத்துக்களை சிபிஐ மதிப்பீடு செய்ததில் தவறு உள்ளது. இதனை கீழ் கோர்ட் கருத்தில் கொள்ள தவறிவிட்டது. சீதளாதேவி தனது தந்தை மற்றும் மாமனார் திருமணத்தின் போது கொடுத்த சீதனப் பொருட்களை விற்று சொத்து வாங்கினார். ஆனால் வருமான வழி வகைகளை காட்டவில்லை என்று விசாரணை நீதிபதி கூறியிருப்பது தவறு என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி மோகன்ராம் இன்று விசாரித்தார். பின்னர் சி.பி.ஐ. கோர்ட் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் எஸ்.ஆர். பாஸ்கரனும், சீதளாதேவியும் ஜாமீனில் செல்ல அனுமதித்தார்.

இருவரும் 20 லட்சம் ரூபாய்க்கு சொத்து ஜாமீன் அளிக்க வேண்டும். பாஸ்கரன் ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சீதளாதேவி 3 மாதங்களுக்கு ஒருமுறை அதே கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X