ஈழம்: ஆதரவு கோரி விஜயகாந்த், சரத்தை சந்திக்கும் இலங்கை அமைச்சர்
திருச்சி: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவு கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் ஆகியோரை சந்திக்கப் போவதாக இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் பி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பயணமாக திருச்சி வந்த சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏற்கனவே விஜயகாந்த்தும், சரத்குமாரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
எனவே அவர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசையும், மாநில அரசையும், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிடச் செய்து, உதவ வேண்டும் என கோரவுள்ளேன்.
ஏற்கனவே முதல்வர் கருணாநிதியை இதுதொடர்பாக சந்தித்துள்ளேன். பிற தமிழக அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளேன் என்றார்.
முன்னதாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் தனது குடும்பத்தினருடன் சென்று சாமி கும்பிட்டார்.