தே.ஜ கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: முக்தார் அப்பாஸ்
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 4 பிரதான கட்சிகள் இடம் பெறும். அவற்றோடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று பாஜகவின் தேசிய துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 12ம் தேதி பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 13ம் தேதி நடக்கும் சங்கல்ப யாத்திரையில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொள்கிறார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கர்நாடக மாநில பிரிவினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அக்கட்சியின் தேசிய துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று பெங்களூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
வரும் பொதுத் தேர்தலை சந்திக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணியில் 3 அல்லது 4 பிரதான கட்சிகள் சேரும். இது தொடர்பாக அந்த கட்சிகளிடம் பேசி வருகிறோம். அதில் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் உள்ளதா என்பது குறித்து இப்போது கூற முடியாது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் பிஜூ ஜனதாதள கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தற்போது அந்த மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையில் எங்களது கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநிலத்தின் நலனில் நாங்கள் அக்கறை செலுத்தி வருகிறோம். அந்த கட்சியுடனான ஆதரவை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம்.
பாஜகவின் தேர்தல் கமிட்டிக் கூட்டம் வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வரும் பொது தேர்தலில் போட்டியிடும் 300 வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றார்.