திரிணமூல் தர்ணா-முடங்கியது நானோ ஆலை!
சிங்கூர்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வரும் தொடர் தர்ணா போராட்டத்தால் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையில் 2வது நாளாக இன்றும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் நானோ தொழிற்சாலையில் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
சிங்கூரிலிருந்து நானோ தொழிற்சாலையை மாற்றும் வரையிலும், விவசாயிகளிடமிருந்து வாங்கிய 400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரக் கோரியும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சிங்கூரில் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் தனது தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்களையும், பணியாளர்களையும் பணிக்கு வர வேண்டாம் என டாடா நிறுவனம் கூறி விட்டது. இதனால் அவர்களால் வேலைக்குவர முடியவில்லை.
நேற்று முதல் நானோ தொழிற்சாலைகயில் பணிகள் அனைத்தும் நின்று விட்டன. இன்றும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும், பணிகளைத்தொடங்க உகந்த நிலை தற்போது இல்லை என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.