குண்டாஸ்-இ.முன்னணி பிரமுகரை விடுவிக்க உத்தரவு
சென்னை: இந்து முன்னணி பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மசூதிக்குள் பன்றிக்குட்டி ஒன்று குத்தப்பட்ட நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அல்மரசதுன் நூர் மதராசாவின் தலைவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்து முன்னணி பிரமுகர் கருணாகரனை கைது செய்தனர். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கருணாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், மனுதாரரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவில், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. சம்பவ இடத்தில் கூட்டம் கூடியதாக கூறப்பட்டுள்ளது. அங்கு போலீசாரின் கூட்டம்தான் இருந்துள்ளது.
இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத்தியில் பதட்டம், பீதி ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தில் அரை பிளேடைக் கொண்டு பன்றிக்குட்டியை கீறி போட்டதாக கூறினார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரை பிளேடால் எப்படி பன்றிக்குட்டியின் மீது குத்துக் காயத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை.
எனவே, மனுதாரரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை வேறு வழக்கில் சிறை வைக்கத் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications