பில்கேட்ஸாக பிறந்திருத்தால் தமிழகத்தை தத்தெடுப்பேன்: விஜயகாந்த்
விருத்தாசலம்: நான் பில் கேட்ஸாக பிறந்திருந்தால் தமிழகத்தை தத்தெடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விருத்தாச்சலம் தொகுதி மக்களை சந்திப்பதற்காக அங்கு வந்திருந்த விஜயகாந்த், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மழை கோட் வழங்கினார். அவரது மனைவி பிரேமலதாவுடன் சேர்ந்து பிற திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விருத்தாசலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியல் கொடுக்கப்பட்டும் அவை இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் எனது தொகுதிக்கு போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
அதேசமயம் மாவட்ட கலெக்டர் நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவிலான பணிகள் நடந்து வருகின்றன. விருத்தாசலம் மருத்துவமனைக்கு கூடுதல் இடம் கேட்டேன். உயர் மின்விளக்கு கோபுரங்கள் கேட்டேன். இதுபோன்று பல பணிகள் முடிக்கப்படவில்லை. அரசு எனது தொகுதியை புறக்கணித்து வருகிறது.
சுவர் விளம்பர பிரச்சனையில் திமுகவினரின் தாக்குதலுக்கு உள்ளான எனது கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது காவல்துறையா காவாலித்துறையா.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதே எம்ஜிஆர்தான். தமிழகத்தில் நாங்கள்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம் என்கிறது திமுக. மின்சாரம் இருந்தால்தானே இலவச மின்சாரம் கிடைக்கும். 24 மணி நேரத்தில் 6 மணி நேரமே மின்சாரம் கிடைக்கிறது.
பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் டீசல் தட்டுப்பாடு இல்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் டீசல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் அல்லாடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பதாக கூறுகின்றனர். இதுதான் பொற்கால ஆட்சியா?
ஒருபுறம் இலவச நிலம் வழங்குகிறோம் என்கிறார்கள். மற்றொரு புறம் அமைச்சர்கள் நிலத்தை அபகரிக்கிறார்கள். மதுவிலக்கு பொறுத்தமட்டில் அதுகுறித்து சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னரே முடிவு செய்ய முடியும். மத்தியில் சுகாதார அமைச்சராக உள்ள அன்புமணி, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதுதானே?
நான் மட்டும் பில்கேட்ஸாக பிறந்திருந்தால் தமிழ்நாட்டை தத்தெடுத்திருப்பேன். மக்களுக்கு இன்னும் அதிகமாக நன்மை செய்வேன் என்றார்.