டாக்டர் ஹனீப் மீதான வழக்கை கைவிட்டது ஆஸி.
மெல்போர்ன்: தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் மீதான வழக்கு விசாரணையை முழுமையாக கைவிட்டு விட்டது ஆஸ்திரேலிய அரசு.
இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்த பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூட ஆஸ்திரேலிய காவல்துறையால் முடியவில்லை. இதையடுத்து ஹனீப்பை விடுவிக்க பெரும் நெருக்கடி எழுந்தது. ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு கண்டனங்களும் குவிந்தன.
இதைத் தொடர்ந்து ஹனீப் விடுவிக்கப்பட்டார். உடனடியாக அவர் நாடு திரும்பினார். இருப்பினும் அவர் மீதான வழக்கு விசாரணையை ஆஸ்திரேலிய காவல்துரை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், ஹனீப் மீதான வழக்கை முழுமையாக கைவிடுவதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய சூவ்நிலையில், டாக்டர் ஹனீப் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் எங்களிடம் இல்லை.
எனவே இனியும் விசாரணையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஹனீப் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்றார்.
ஹனீப் மீதான வழக்கு கைவிடப்பட்டது குறித்த தகவலை அவரது வக்கீல் ஹாட்சன், ஹனீப்புக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஹனீப் மகிழ்ச்சி ெதரிவித்ததாக ஹாட்சன் தெரிவித்தார்.
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து ஹனீப் கைது செய்யப்பட்டார். 3 வாரங்கள் அவர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டார்.