அமர்நாத் கோவிலுக்கு தற்காலிக நிலம்: அரசு ஒப்புதல்
ஜம்மு: அமர்நாத் யாத்ரிகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க தற்காலிக அடிப்படையில் நிலம் ஒதுக்க ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து 61 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது.
இதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு ெதரிவித்தன. பெரும் போராட்டமும் வெடித்தது. இதையடுத்து அந்த நிலம் திரும்ப பெறப்பட்டது.
இதை கண்டித்து ஜம்முவில் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இதனால் அங்கு இரண்டு மாதங்களாக போராட்டமும் வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.எஸ். புளோரியா தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா அமைத்தார்.
இந்த குழுவுக்கும், சமிதிக்கும் இடையே நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. நள்ளிரவு வரை சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. முடிவில் இன்று அதிகாலை உடன்பாடு உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி யாத்திரை காலத்தில் அரசின் 40 ஏக்கர் நிலத்தை அமர்நாத் கோயில் வாரியம் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பல நூற்றாண்டுகளாக காஷ்மீரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையிலும் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது என்றும், யாத்ரிகர்களை ஜம்மு-காஷ்மீர் மக்கள் இருகரம் நீட்டி வரவேற்பதாகவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிருஷ்டவசமாக மாநில அரசு மேற்கொண்ட சில முடிவுகள் காரணமாக பிரச்சனை ஏற்பட்டது என்றும், இதில் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் கோயில் வாரியம் பல்டால் மற்றும் டொமைல் பகுதியில் உள்ள நூறு ஏக்கர் நிலத்தை பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க யாத்திரை காலத்தில் பயன்படுத்திக் கொள்ள இந்த உடன்பாடு வகை செய்கிறது.
பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக தங்கும் இடங்கள் அமைப்பது, மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை இந்த இடத்தில் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் அரசு சார்பில் குழுவின் தலைவர் புளோரியாவும், சமிதி சார்பில் லீலா கரண் ஷர்மாவும் கையொப்பமிட்டனர். அமர்நாத் நில விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படுவதாக அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் ஷர்மா தெரிவித்தார். தங்களது மேலும் சில கோரிக்கைகள் இன்னும் ஏற்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications