நள்ளிரவில் எரிந்த சென்னை மாநகரப் பேருந்து
சென்னை: சென்னை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று நள்ளிரவில் மர்மமான முறையில் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேளம்பாக்கத்தில் இருந்து தி.நகர் வரை செல்லும் மாநகரப் பேருந்து ஒன்று 29ம் தேதி இரவு கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்ஸில் டிரைவர் ரவியும், கண்டக்டர் கோவிந்தசாமியும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் எஞ்சினின் முன்பக்கம் எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்கினர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் எரிந்துக் கொண்டிருந்த பேருந்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற 4 பேருந்துகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. தகவலறிந்த கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்
எரிக்கப்பட்ட பேருந்தின் அருகிலும் பஸ் டிப்போவின் சில இடங்களிலும் நந்தனார் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் சில துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டு சிதறிக்கிடந்தன.
அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
துரை என்ற சமுதாயப் போராளிப் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்து கொலை வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும். பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துண்டுப் பிரசுரங்களுக்கும் பேருந்து எரிப்புக்கும் சமபந்தம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications