அதிகரிக்கும் மின்தடை: மாவட்டங்களில் இனி 5 மணி நேரம் கட்!

தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஷிப்ட் முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் காலையில் மட்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டது. தற்போது மாலையிலும் மின்சாரம் தடைபட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நாளை முதல் மின்வெட்டின்நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டங்களில் 5 மணி நேர மின்தடையும், சென்னை மாநகரில் ஒன்றரை மணி நேரமும், புறநகர்ப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின் தடை அமலாக்கப்படும்.
மாவட்டங்களில் ...
சென்னை மாநகர், புறநகர் நீங்கலாக உள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் (அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) தற்போது உள்ளது போலவே 6 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு (அதாவது வீடுகளுக்கு) 9 மணி நேரம் மின்சாரம் தரப்படும். மீதம் உள்ள 3 மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்படும்.
மாலையில், (6 மணி முதல் இரவு 10 மணி வரை) அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 3 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். மீதம் உள்ள ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 7 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். மீதம் உள்ள ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும்.
சென்னை மாநகரில் ...
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒன்றரை மணி நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் பகல் வேளைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் மின் தடை அமலாக்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படும்.
தவிர்க்க வேண்டியவை ..
மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் சில முக்கிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என மின்சார வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மாலை நேரங்களில் வெல்டிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பம்புசெட்டுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அலங்கார மின் விளக்குகள் மற்றும் அறிவிப்பு விளம்பரப் பலகை விளக்குளை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
செப்டம்பர் 1ம் தேதியான திங்கள்கிழமை முதல் இந்த மின் தடை அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், நிலைமை சீரடையும்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications