அமெரிக்கன் கல்லூரியை உடனடியாக திறக்க ஆசிரியர்கள் கோரிக்கை
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியை உடனடியாக திறந்து கல்விப் பணி சுமூகமாக நடந்திட தமிழக அரசு கல்லூரி நிர்வாகத்திற்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் பொதுச்செயலாளர் ச.விவேகானந்தன் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக நிர்வாகத்தின் இரு தரப்பினரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பினரும் நீதிமன்றத்திலும் வெளியிலும் தங்களுடைய அதிகாரத்தினை நிலைநிறுத்திக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
நிர்வாகத்திற்கிடையே நடக்கும் இம்மோதலினால் இக்கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்கன் கல்லூரி இரதரப்பு நிர்வாகங்களும் மூட்டாவின் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இருதரப்பினரும் மூட்டாவின் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 29ம் தேதி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள், ஆசிரியர், அலுவலர்களை கண்மூடித்தனமாக காவல்துறை தாக்கியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்லூரியை உடனடியாக திறந்து கல்விப் பணி சுமூகமாக நடந்திட கல்லூரி நிர்வாகத்திற்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications