மின்துறை அமைச்சர் ஷிண்டே வந்தபோது இருண்ட விமான நிலையம்!
சென்னை: மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது மின்தடை ஏற்பட்டு விமான நிலையம் இருண்டு கிடந்தது. இதையடுத்து ஜெனரேட்டர்களை இயக்கி சில விளக்குகளை மட்டும் எரிய விட்டு நிலைமையை சமாளித்தனர் அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் மின் தடை பாடாய்ப் படுத்தி வருகிறது. நிலைமையை சமாளிக்க அரசும் கடுமையாகப் போராடி வருகிறது. ஷிப்ட் முறையில் மின்தடை அமலாக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கூடுதல் மின் தடையும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று இரவு சென்னைக்கு வந்தார். ஜி.கே.மணியின் மகன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்தார்.
ஷிண்டே சென்னைக்கு வந்து இறங்கியபோது விமான நிலையம் இருளில் மூழ்கியிருந்தது. காரணம் மின் தடை. இதையடுத்து அதிகாரிகள் ஜெனரேட்டர்களை இயக்கி சில விளக்குகளை மட்டும் எரிய விட்டனர். அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றார் ஷிண்டே.
முன்னதாக செய்தியாளர்கள் அவரிடம், மின் தடையால் ஏற்படும் அவதி குறித்து விளக்கி எப்போது நிலைமை சரியாகும் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஷிண்டே, தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின்தடை ஏற்பட்டுள்ளது. காரணம், மின்சாரப் பற்றாக்குறைதான்.
இந்த நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்ைத அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி வருகிறோம். தமிழகத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் தரப்படுகிறது.
நிலைமையைப் போக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் நிலைமை சரியாகும். இந்த அளவுக்கு கடுமையாக இருக்காது என்றார் ஷிண்டே.












Click it and Unblock the Notifications