அதிமுகவுடன் கூட்டணி: தேவே கௌடா
நெல்லை: எனக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருந்தது கிடையாது. கூட்டணி குறித்து இரு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பேசுவார்கள். தேர்தலின்போது இறுதி முடிவு எட்டப்படும் என்று முன்னாள் பிரதமர் தேவே கௌடா கூறியுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தென்மண்டல மாநாடு, காமராஜரின் 106வது பிறந்தநாள் விழா நெல்லையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் தேவே கௌடா நெல்லை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எங்கள் கட்சியின் தென்மண்டல மாநாடு நெல்லையில் நடக்கிறது. தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் எங்கள் பெரிய சக்தியாக இல்லாததால் தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து, ஒரு இடத்தில் போட்டியிட்டோம். ஆனால் தோல்வி அடைந்தோம். எனக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருந்தது கிடையாது. கூட்டணி குறித்து இரு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பேசுவார்கள். தேர்தலின்போது இறுதி முடிவு காணப்படும்.
நான் பிரதமராக இருந்துபோது, ஒகேனக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை கூறினேன். அதாவது, இரு மாநில எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தேக்கி தேவையானபோது பயன்படுத்தலாம். இருமாநிலங்களுக்கும் இடையே அமைதியான நிலை நீடிக்க அந்த அணை தீர்வாக அமைய வேண்டும் என்று கூறினேன் என்றார்.
பின்னர் மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகாரித்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காமராஜரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த மாநாட்டுக்கு தனது கட்சியின் சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி பெருமைப்படுத்தியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
மத்தியில், பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சி, தற்போது காங்கிரஸின் நான்கரை ஆண்டு ஆட்சியை காட்டிலும் எனது பத்தரை மாத கால ஆட்சி மிகவும் உயர்வானது. இந்த நாடு முன்னேற்ற பாதையில் செல்லவும் வளர்ச்சிக்கும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் வளர வேண்டும்.
நம்நாட்டின் பொருளாதார கொள்கையை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். கிராமங்களை விட்டுவிட்டு இளைஞர்கள் நகரங்களுக்கு குடி பெயருகின்றனர். அங்கு குடிசையில் வாழ்ந்து கஷ்டப்படுகின்றனர் என்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அறிவிக்கப்படாத மின் வெட்டினால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கின்றன. எனவே மின் உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தனியார் கல்லூரிகளை கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதை கைவிட வேண்டும்.
தேசிய அளவில் 3வது அணி உருவாகும் ஒரு நல்ல சூழல் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக இந்த அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications