பிஎம்டபிள்யூ வழக்கு: சஞ்சீவ் நந்தா உள்பட 4 பேர் குற்றவாளிகள்
டெல்லி: டெல்லியில் 9 வயது குழந்தை உள்ளிட்ட 6 பேரை பி.எம்.டபிள்யூ காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, டெல்லியின் லோதி காலனி பகுதியில், அதிகாலையில் தாறுமாறாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு சிறுவன் மற்றும் 3 போலீஸார் அடக்கம்.
இந்த வழக்கில் நந்தா, காரில் இருந்த அவருடைய நண்பர் மானிக் கபூர், தொழிலதிபர் ராஜீவ் குப்தா, அவருடைய நிறுவனத்தில் பணியாற்றும் போலா நாத், ஷியாம் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இன்று நீதிபதி வினோத் குமார் தீர்ப்பளித்தார். அவர் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டம் 304வது பிரிவின் கீழ் சஞ்சீவ் நந்தா குற்றவாளி என்று அறிவிக்கப்படுகிறது.
விபத்துக்குப் பின்னர் காரில் ஏற்பட்ட ரத்தக் காயம், உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தி, சாட்சியத்தை அழிக்க முயன்ற ராஜீவ் குப்தா, போலா நாத், ஷியாம் சிங் ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த போது காரில் இருந்த மானிக் கபூர் மீது எந்தக் குற்றமும் இல்ைல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் விடுவிக்கப்படுகிறார்.
குற்றவாளிளாக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் நந்தா உள்ளிட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பைக் கேட்பதற்காக வந்திருந்த நந்தாவின் தந்தை சுரேஷ் நந்தா, தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் தீர்ப்பைக் கேட்டதும் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications