ஜனவரி 1ல் இலவச வேட்டி, சேலை வினியோகம்
ஈரோடு: அரசின் இலவச வேட்டி மற்றும் சேலைகளை வரும் ஜனவரி முதல் தேதி அன்று முதல்வர் கருணாநிதி வழங்குவார் என்று கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தெரிவித்தார்.
ஈரோட்டு கூட்டுறவு சங்களில் தயாரிக்கப்பட்டு வரும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.256 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா ஒரு கோடியே 59 லட்சம் வேட்டி மற்றும் சேலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி நவம்பர் மாதம் முடிவடைந்துவிடும். தற்போது அதில் 50 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டது. டிசம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஜனவரி முதல் தேதி அன்று இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். மின் தட்டுப்பாட்டு காரணமாக உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க தறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலைகளில் மாறுதல் தேவை என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் புதிய டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications