விநாயகர் சதுர்த்தி: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டில் இருள் அகன்று ஒளி வீசட்டும் என்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தும்பை மலர்போல சிரித்து, துதிப்போர்க்கு துன்பம் நீக்கி துணை நிற்கும் முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயக சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதிமூலமானவரான வேழமுகத்தோனை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பது தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை. அதற்கேற்ப பெயரிலே பிள்ளை என்று இருப்பதால் அம்மாவின் அன்புக்கு கட்டுப்படும் குழந்தைபோல் அவரை வணங்கும் அனைவரின் அன்புக்கும் கட்டுப்பட்டு, வேண்டியதை அருளும் கருணைக் கடலாக விநாயகப்பெருமான் விளங்குகிறார்.
கருணை வடிவமாக காட்சியளிக்கும் விநாயகப்பெருமான் அவதரித்த இந்த நன்னாளில் தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீச, தட்டுப்பாடுகள் தகர்த்தெறியப்பட, விலைவாசி வீழ்ச்சியடைய, அராஜகம் அழிய, அமைதி தவழ, அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வாழ, நல்லாட்சி மலரவேண்டுமென்று விநாயகப் பெருமானை பிரார்த்திக்கிறன்.
விநாயக சதுர்த்தியை பயபக்தியோடு கொண்டாடும் எனதருமை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications