'டான்சி' ஒன்றே போதுமே-ஜெ.வுக்கு கருணாநிதி பதில்
சென்னை: நான் பொய் வழக்குப் போட்டதாகக் கூறும் ஜெயலலிதாவுக்கு பதில் அளிக்க டான்சி நிலம் ஒன்று போதுமே, உச்ச நீதிமன்றத்தில் டான்சி நில வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றே போதுமே என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கேள்வி: ஜெயலலிதா மீது தாங்கள் பொய் வழக்குகளை புனைந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் விடுதலை பெற்றதாகவும் ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?
பதில்: இதற்கு பதில் அளிக்க டான்சி நிலம் ஒன்று போதுமே!. உச்ச நீதிமன்றத்தில் இந்த டான்சி நில வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்ன?.
அப்போது நீதிபதி கூறிய வாசகங்கள் யாவை? அரசு நிலத்தை வாங்கியது தவறு, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னது உண்டா? இல்லையா? அதையேற்றுக்கொண்டு, மோசடியாக வாங்கிய நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தது உண்டா? இல்லையா?.
25.11.2003ம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறைந்தபட்ச நடத்தை மற்றும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை குற்றவியல் சட்டம் வலியுறுத்துகிறது. உயர் பதவியில் இருப்பவர்கள் அந்த சட்டத்தில் ஒளிந்து கொள்ளாமல் உயர்ந்தபட்ச நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நடத்தை நெறி முறைகளை மதித்து நடக்க வேண்டுமே தவிர குற்ற வழக்குகளில் உள்ள நெளிவுசுளிவுகளில் ஒளிந்து தப்பித்துக் கொள்ளக் கூடாது. உயர் பதவியில் இருப்பவர்கள் அரசின் சொத்தைப் பயன்படுத்தி தங்கள் செல்வங்களை அதிகரிப்பது அல்லது அரசுக்கு உரியதை தங்களுக்குரியதாக மாற்றிக்கொள்வது என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய போக்கை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா?.
கேள்வி: ஒரிஸ்ஸாவில் மதவெறியாட்டம் அரங்கேறியிருக்கிறதே?
பதில்: ஆம்; அரங்கேற்றியவர்கள் யார் என்று அனைத்து இந்தியாவிற்கும் தெரியும். பழிக்குப் பழி வாங்குதல் என்ற திரை மறைவில் அராஜக வெறியாட்டம் நடத்தி மனிதநேயமற்ற மத வெறியாளர்கள் நடத்திய வன்முறைத் தாண்டவங்களுக்கு இன்னமும் சில மதவாதிகள்- மதவெறி வளர்க்க இயக்கம் நடத்துவோர் வக்காலத்து வாங்குவதுதான் நினைக்கவே முடியாத வேதனையாக இருக்கிறது.
அதற்கு தான் மதசார்பற்ற சமத்துவ நிலையும், மத நல்லிணக்கம் என்ற சமரச நிலையும் உருவாக வேண்டுமென்று பகுத்தறிவு இயக்கத்தார் பணியாற்றுகிறார்கள்.
கேள்வி: சென்னை தியாகராய நகரில் சரவணா ஸ்டோர்ஸ் என்ற வணிக மாளிகை தீ விபத்துக்குள்ளாகி கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது பற்றி?
பதில்: வீடுகளோ, வணிக வளாகங்களோ, ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கட்டப்பட்டிருந்தால்- இத்தகைய விபத்துக்களுக்கு இடமில்லாமல் போகும், இவ்வளவு பெரும் இழப்பும் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியுமல்லவா?.
நீதி மன்றங்களில் 'தடை பெறலாம்' என்ற நம்பிக்கையும் பொதுவாக விதிகளை மீறிச் செயல்படும் போக்கு- மாளிகை போன்ற அடுக்கு மாடி வீடுகள் மட்டுமல்ல; சட்டத்திற்குப் புறம்பான சாதாரண கட்டிடங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமென்று உரைத்திட இயலாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications